Tuesday, June 20, 2017

மனம் விட்டு பேசும் இரு உள்ளங்கள்

அண்ணாந்து பார்த்தேன்
ஆதங்கத்தில் கேட்டேன்
ஏன் என்னை வதைக்கிறாய்?
நெஞ்சம் பதைக்க வைக்கிறாய்!

பதில் வந்தது, நான் என்ன செய்ய?
என் வருகைக்காக ஏங்குகிறாய்.
வந்தால் சாடுகிறாய்.
தொட்டால் சிலிர்க்கிறாய்.
தொடா விட்டால் சருகாகிறாய்.

நான் கேட்டேன்
நேரம் பார்த்து வர கூடாதா?
நெருங்காமலேயே விலகுவதா?
வந்தாலும் வைகை புயலாய் 
வேரறுத்து போகுவதா?

சட்டென்று சொல் கேட்டது.
வருவதும் போவதும் என் கையில் இல்லை.
நமது சுற்றும் சூழலும் ஏதுவாய் இல்லை.
எனக்கும் உனக்கும் தடைகளோ கொள்ளை.

நீ தான் எனக்கு ஆதாரம்.
நீயல்லாது விளைவது சேதாரம்.
நீ தான் என் வாழ்வின் மையம்.
நீ இல்லாமல் வெறும் சூன்யம்.

சரி. பொறுத்திரு.
காலமும் வேளையும் கூடி வரும்.
கனத்த மழையாய் நான் வருவேன்.
வாடும் பயிர் உன் கண்ணீர் துடைப்பேன்.
பசுமையும் வளமையும் திரும்ப வரும்.
நாடு நலமும் இன்பமும் பெரும்.

மழை மேகத்திற்கும் மண்ணில் ஒரு செடிக்கும் இடையே உரையாடல்.

No comments:

Post a Comment